Saturday, October 21, 2017

பக்தி

                         
என்றும் போல் சந்தனமும் குங்குமமும் மணக்க மீண்டும் ஒருமுறை தன் முகத்தை   கண்ணாடியில்  பார்த்து திருப்த்தி அடைந்துவிட்டு பூஜைஅறைக்குள் புகுந்தாள் சாந்தா.  மனம் ஒன்றி பூஜித்துவிட்டு...
"இறைவா! நீ எனக்கு அளித்த இந்த வாழ்க்கையினை பரிபூரணமாக நீ அளித்த வரமாக மட்டுமே ஏற்று வாழும் மனபக்குவத்தினை எனக்கு அருள்வாய்" பக்தியுடன்  வேண்டிக்கொண்டு....
சமையலறையில் பக்தி பாடல்கள் ஒலிக்க சமைத்துவிட்டு....

காலை உணவை தட்டுகளில் நிரப்பியதும்  ஆவலோடு  அள்ளி விழுங்கி கொண்டிருந்த பள்ளி சிறுவனான  தன்  மகனை பார்க்கையில்....
 விடுமுறை நாளிலும் பூஜை அறைக்கு கூட வராமல் சாப்பிட ஆரம்பிக்கிறானே மனம் அங்கலாய்த்தது...
இறைவா  என் மகனை மன்னித்து விடு மனதார வேண்டி கொண்டாள்.

பூஜை செய்துவிட்டு கம்ப்யூட்டரில் மெயில் பார்த்தவாறே சிற்றுண்டியை வாயில் போட்டதுமே "சட்னியில் உப்பே இல்லை" என்ற
கணவரின் வார்த்தைகள் சுருக்கென்று உரைக்க  தவறை உணர்ந்து
மன்னிப்பு கேட்டுவிட்டு உப்பை சேர்த்து விட்டு நிமிர்கையிலே தெளிவாக புரிந்தது....

தாயின்   குறைகளை  தன் வரமாகவே ஏற்கும் மகனின்  இந்த குணம்.... 
மிக உயர்ந்ததான தாய் மீது  இருந்த பக்தியை தவிர வேறென்னவாக இருக்க முடியும்?



Monday, September 18, 2017

என்ன தவம் செய்தேனோ?



என் முகம்  அறியா முதல் முகநூல்  வாசகி முழுநிலாவின் தொடர்ந்த உற்சாக விமர்சனங்கள்  இன்று என்னை பெரிய எழுத்தாளராக மாற்றிவிட்டது.

வாழ்க முழுநிலா.விமர்சனத்தால் என்னை கட்டிபோட்டவள்.அவளை நேரில் ஒரு முறையேனும் கண்டு நன்றி சொல்ல ஏங்குகிறேன்.

ஆனால்....

என் மகன். நான் எழுதுவதற்கு அவனும் ஒரு காரணம்.அம்மா அப்பாவிடம் பாசமும் மரியாதையும் உள்ளவன்தான்.

 தேர்வுக்கு படிக்கையில் நடுநடுவே    ப்லேஸ்டேஷன்  விளையாடுவதை  பார்க்கையில் என்கண்கள் குளமாகின்றன. அவனிடம்  நானும் அவன் தந்தையும் எவ்வளவோ எடுத்துச்  சொல்லியும் பத்தாம் வகுப்பில் படிக்கின்றோம் என்ற பொறுப்பு சிறு துளியும் அவனுக்கு வரவில்லை.

குழந்தைகளை அடிப்பதும் திட்டுவதும் தவறான செயல்கள் என்பதனை நன்கு உணர்ந்தவள் நான் என்பதால்  பொறுமை எல்லை மீறும் சந்தர்ப்பங்களில்  கண்ணீர் பெருக்கெடுத்துவிடுகின்றது.

பூஜை அறையை தன்னிச்சையாக கால்கள் அடைந்தன. கடவுளே என் மகனை பொறுப்புள்ளவனாக மாற்றிவிடு. வழக்கம்போல் மனம் கிடந்து அரற்றியது.

இவனுக்காக நான் வேலைக்கு கூட போகாமல் மகனே உலகம் என்றல்லவா வாழ்கிறேன். ஓரளவு இலக்கியம் கற்றவள் நான்.

போன வருடம் இவனை நினைத்து கவலைப்பட்டு மனரீதியில் சற்று பாதித்து நினைவாற்றல் குறைய ஆரம்பித்ததும்  என் கணவர் மீண்டும் நீ எழுது என்று
ஊக்குவிக்க ஒரே மாதத்தில் இணையத்தில் எழுத ஆரம்பித்தேன்.

எழுத்துலகம் இனிமையானது.என் மனதை குளிரவைத்துவிடுகின்றது.
ஒருவேளை.... சென்ற வாரம்  பதிவிட்ட  என்  கவிதைக்கு முழுநிலாவின் விமர்சனம் வந்திருக்குமோ? என்று ஆவல் மனதில் தோன்ற என் கணினி வேலை செய்யாததால்....


என்  மகனின்  கணினியை   திறந்தபோது மூடாது வைத்திருந்த அவனின்
முகநூல் பக்கத்தை கண்டதும்
என் கண்களை என்னால் நம்ப முடியவில்லை.

"அருண்"குரல் தடுமாற நான் அழைத்ததும்
"அம்மா என்னம்மா" ஓடிவந்த என் மகன் ஒரு நொடியில் புரிந்துகொண்டான்
"சாரிம்மா...வந்து... முழுநிலா நான்தான் உங்களை ஊக்குவிக்க இப்படி செய்தேன்"என்றான்

பெருமிதத்தில் கண்கள் குளமாகின.தாயை வளர்க்கும் பிள்ளையல்லவோ இவன்?ஊக்கமளிக்கும் வார்த்தைகளின் வலிமையை எனக்கு   நிஜத்தில் உணரவைத்தவன்.

"என்ன தவம் செய்தேனோ  உன்னை பெற?" ஆரத்தழுவி நான் சொன்ன  வார்த்தைகளால் என் மகனின் கண்களில் தெரிந்த உற்சாகம் அவனை உயர்த்தும் இனி.

Saturday, February 18, 2017

மாற்றமேயில்லாத மாற்றங்கள்!

கீதா என் அன்பு குட்டி சகோதரி...பட்டிணத்து  மாப்பிள்ளைக்கு மணமுடித்து போனவள். நானும் வெளிமாநிலத்தில் வேலைகிடைத்து திருமணம் குழந்தைகள் என குடும்பஸ்தனாகிவிட்டேன்.

இதோ அப்பாவின் அறுபதாம் கல்யாணத்திற்கு மீண்டும் பிறந்த ஊரில் சந்திக்கப்போகிறோம்.ஒரு நாள் முன்னதாகவே வந்துவிட்டேன் நான்.
என் பால்ய சிநேகிதர்களிடம் உரையாடி மகிழ்ந்துவிட்டு என் மகனுடன் எங்கள் வீட்டு கொல்லைப்புறத்தில் சற்று விளையாடியபோது,நானும் என் குட்டி தங்கையும் அடித்த கொட்டங்கள் மனதில் எட்டி பார்த்தன.

பூவரசன் இலை பறித்து அவள் நாதஸ்வரம் வாசிக்க...பழைய பிளாஸ்டிக் வாளியில் நான் தவிலடித்தது, தோட்டத்தில்  பாத்திக்கட்டி நீரூற்றி செடி வளர்த்தது, கிணற்றில் போட்டுவிட்ட வாளியை எடுக்க பாதாள கொலுசு போட்டு இரவு வரை தேடியது..
கீழே விழும் தேங்காய் குரும்பிகளை சேகரித்து வைத்தது....  .நினைக்கவே சிரிப்பும் ஏக்கமுமாக இருந்தது.

என் தங்கையை எதிர்பார்த்து காத்திருந்தேன்.

வாசலில் "குட்டிம்மா வந்தாச்சு"அப்பாவின் குரல் ஒலிக்க ஆவலாய் ஓடினேன் மகனை தூக்கிக்கொண்டு...

கையில் இருந்த தன் குழந்தையை அம்மாவிடம் கொடுத்தவாறே
"அம்மா அவருக்கு ரொம்ப பசி ஏதாவது சாப்பிட இருக்கா?"
அவசரமாக சமையலறை ஓடிய குட்டிம்மாவை தொடர்ந்து ஓடினாள் அம்மா.

"வாங்க மாப்பிள்ளை சௌக்கியமா?"  விசாரித்துக்கொண்டே மின்விசிறியை அதிகப்படுத்தின அப்பா....
"மோகன் மாப்பிள்ளைக்கு வாழை இலை அறுத்துவா " என்றவுடன்
கொல்லைப்புறம்  ஓடியவனுக்கு....
"அண்ணி , அவருக்கு உப்புமா பிடிக்காது அண்ணி  நான் இட்லி வைக்கிறேன் சாம்பார் இருக்கா? இல்லைனா கொஞ்சம் சட்னி அரைக்கவா?"
சமையலறையில் தங்கையின் வார்த்தைகள் தெளிவாக கேட்டு
மேலும் பரபரப்பை மனதில் ஏற்படுத்த வேகமாக வாழையிலை அறுக்கும்போது... அருகிலிருந்த பூவரச மரம்  என்னை ஏக்கமாக பார்ப்பதுபோல் தோன்றியது.

Friday, February 10, 2017

விலகும் மேகங்கள்!

மேக மூட்டமாய் வானம். இருள் சூழ்ந்த இரவு. மனதில் பாரம் பாறையாய் அழுத்த, கால்கள் தன்னிச்சையாய் கடல் மண்ணில் நடந்தது. சுற்றிலும் நடக்கும் நிகழ்வுகள் எதுவுமே கண்களில் பதியாமல் கண்ணீர்   பெருகி வழிந்தது.

மூன்று மாதமாக மனைவியை இழந்த தனிமை. அலுவலகத்தில் கவனம் சிதறுவதால்  வேலையை தொடரமுடியவில்லை. துன்பத்தை பகிர்ந்துகொள்ள முப்பது  வருட திருமண வாழ்வில்  ஒரு குழந்தை  கூட பிறக்காததை  நினைத்ததும்   இன்னும் சுயபச்சாதாபம் கூடியது.

இனி எனக்கென்று யாருமில்லை இங்கே. இவ்வுலகில் எதற்காக நான் வாழவேண்டும். என் முடிவு  இதோ இன்று இந்த கடலில் என்று திண்ணமாக்கி கொண்டு, கண்களை இறுக மூடி கடைசி மூச்சு காற்றை சுவாசித்துவிட்டு.... 

கடலில் மூழ்கிய  தருணம்...

எங்கிருந்து வந்தனர் இத்துனைபேரும்?

என்னை காப்பாற்றி கரைசேர்த்தனர் மீனவர்கள்,

முதியவர் ஒருவர் என்னிடம் வந்தார். என் தலையை கோதி விட்டு பேசினார்...

"உங்க பிரச்சன இன்னானு கேக்கல ஆனா..ஒன்னு சொல்றன்... 
சுனாமில என் குடும்பமே அடிச்சிக்கினு பூடுச்சு அதிலே இங்க இருக்கவங்க நிறைய பேருக்கு சொந்த பந்தங்களே இப்ப கெடையாது... பெத்தவங்க இல்லாம அனாதையான கொயந்தைங்களை நான் வளக்கறன்..
அவங்களுக்காக இதே கடலை கும்பிட்டு மறுபடியும் மீன்புடிக்கிறேன்..
சோதனைனு வந்தா... சாவுதான் முடிவுன்னா இந்த ஒலகம் பூராவும்  பொணம்தான் இருக்கும்..."

முதியவர் பேசிக்கொண்டிருக்க, இந்த உலகம் நமக்கு என்ன செய்தது என்று ஏங்குவதை விட்டு.. இந்த உலகத்திற்கு நாம் என்ன செய்யலாம் என்று நினைப்பவர்களால்   இங்கு  வாழ்வதற்கான அர்த்தங்களை தானே உருவாக்கிக்கொள்ள முடியும் என்பது தெளிவாக புரிய ஆரம்பித்தது.

முதியவருக்கு நன்றி கூறி வணங்கி புறப்பட்டபோது என் மனதை போலவே வானத்திலும் மேகங்கள் விலகி முழு நிலவு ஒளிவீசி கொண்டிருந்தது.