Saturday, February 18, 2017

மாற்றமேயில்லாத மாற்றங்கள்!

கீதா என் அன்பு குட்டி சகோதரி...பட்டிணத்து  மாப்பிள்ளைக்கு மணமுடித்து போனவள். நானும் வெளிமாநிலத்தில் வேலைகிடைத்து திருமணம் குழந்தைகள் என குடும்பஸ்தனாகிவிட்டேன்.

இதோ அப்பாவின் அறுபதாம் கல்யாணத்திற்கு மீண்டும் பிறந்த ஊரில் சந்திக்கப்போகிறோம்.ஒரு நாள் முன்னதாகவே வந்துவிட்டேன் நான்.
என் பால்ய சிநேகிதர்களிடம் உரையாடி மகிழ்ந்துவிட்டு என் மகனுடன் எங்கள் வீட்டு கொல்லைப்புறத்தில் சற்று விளையாடியபோது,நானும் என் குட்டி தங்கையும் அடித்த கொட்டங்கள் மனதில் எட்டி பார்த்தன.

பூவரசன் இலை பறித்து அவள் நாதஸ்வரம் வாசிக்க...பழைய பிளாஸ்டிக் வாளியில் நான் தவிலடித்தது, தோட்டத்தில்  பாத்திக்கட்டி நீரூற்றி செடி வளர்த்தது, கிணற்றில் போட்டுவிட்ட வாளியை எடுக்க பாதாள கொலுசு போட்டு இரவு வரை தேடியது..
கீழே விழும் தேங்காய் குரும்பிகளை சேகரித்து வைத்தது....  .நினைக்கவே சிரிப்பும் ஏக்கமுமாக இருந்தது.

என் தங்கையை எதிர்பார்த்து காத்திருந்தேன்.

வாசலில் "குட்டிம்மா வந்தாச்சு"அப்பாவின் குரல் ஒலிக்க ஆவலாய் ஓடினேன் மகனை தூக்கிக்கொண்டு...

கையில் இருந்த தன் குழந்தையை அம்மாவிடம் கொடுத்தவாறே
"அம்மா அவருக்கு ரொம்ப பசி ஏதாவது சாப்பிட இருக்கா?"
அவசரமாக சமையலறை ஓடிய குட்டிம்மாவை தொடர்ந்து ஓடினாள் அம்மா.

"வாங்க மாப்பிள்ளை சௌக்கியமா?"  விசாரித்துக்கொண்டே மின்விசிறியை அதிகப்படுத்தின அப்பா....
"மோகன் மாப்பிள்ளைக்கு வாழை இலை அறுத்துவா " என்றவுடன்
கொல்லைப்புறம்  ஓடியவனுக்கு....
"அண்ணி , அவருக்கு உப்புமா பிடிக்காது அண்ணி  நான் இட்லி வைக்கிறேன் சாம்பார் இருக்கா? இல்லைனா கொஞ்சம் சட்னி அரைக்கவா?"
சமையலறையில் தங்கையின் வார்த்தைகள் தெளிவாக கேட்டு
மேலும் பரபரப்பை மனதில் ஏற்படுத்த வேகமாக வாழையிலை அறுக்கும்போது... அருகிலிருந்த பூவரச மரம்  என்னை ஏக்கமாக பார்ப்பதுபோல் தோன்றியது.

Friday, February 10, 2017

விலகும் மேகங்கள்!

மேக மூட்டமாய் வானம். இருள் சூழ்ந்த இரவு. மனதில் பாரம் பாறையாய் அழுத்த, கால்கள் தன்னிச்சையாய் கடல் மண்ணில் நடந்தது. சுற்றிலும் நடக்கும் நிகழ்வுகள் எதுவுமே கண்களில் பதியாமல் கண்ணீர்   பெருகி வழிந்தது.

மூன்று மாதமாக மனைவியை இழந்த தனிமை. அலுவலகத்தில் கவனம் சிதறுவதால்  வேலையை தொடரமுடியவில்லை. துன்பத்தை பகிர்ந்துகொள்ள முப்பது  வருட திருமண வாழ்வில்  ஒரு குழந்தை  கூட பிறக்காததை  நினைத்ததும்   இன்னும் சுயபச்சாதாபம் கூடியது.

இனி எனக்கென்று யாருமில்லை இங்கே. இவ்வுலகில் எதற்காக நான் வாழவேண்டும். என் முடிவு  இதோ இன்று இந்த கடலில் என்று திண்ணமாக்கி கொண்டு, கண்களை இறுக மூடி கடைசி மூச்சு காற்றை சுவாசித்துவிட்டு.... 

கடலில் மூழ்கிய  தருணம்...

எங்கிருந்து வந்தனர் இத்துனைபேரும்?

என்னை காப்பாற்றி கரைசேர்த்தனர் மீனவர்கள்,

முதியவர் ஒருவர் என்னிடம் வந்தார். என் தலையை கோதி விட்டு பேசினார்...

"உங்க பிரச்சன இன்னானு கேக்கல ஆனா..ஒன்னு சொல்றன்... 
சுனாமில என் குடும்பமே அடிச்சிக்கினு பூடுச்சு அதிலே இங்க இருக்கவங்க நிறைய பேருக்கு சொந்த பந்தங்களே இப்ப கெடையாது... பெத்தவங்க இல்லாம அனாதையான கொயந்தைங்களை நான் வளக்கறன்..
அவங்களுக்காக இதே கடலை கும்பிட்டு மறுபடியும் மீன்புடிக்கிறேன்..
சோதனைனு வந்தா... சாவுதான் முடிவுன்னா இந்த ஒலகம் பூராவும்  பொணம்தான் இருக்கும்..."

முதியவர் பேசிக்கொண்டிருக்க, இந்த உலகம் நமக்கு என்ன செய்தது என்று ஏங்குவதை விட்டு.. இந்த உலகத்திற்கு நாம் என்ன செய்யலாம் என்று நினைப்பவர்களால்   இங்கு  வாழ்வதற்கான அர்த்தங்களை தானே உருவாக்கிக்கொள்ள முடியும் என்பது தெளிவாக புரிய ஆரம்பித்தது.

முதியவருக்கு நன்றி கூறி வணங்கி புறப்பட்டபோது என் மனதை போலவே வானத்திலும் மேகங்கள் விலகி முழு நிலவு ஒளிவீசி கொண்டிருந்தது.