Saturday, October 27, 2012

ஒரு அழகிய தீபகற்பத்தில் அதிசய குட்டித்தீவுகள்

"எங்க கிளம்பறோம் மம்மி?"

சூட்கேசுகளில் புதுத்துணிகளை திணித்துக்கொண்டிருந்த அம்மாவிடம் ஆவலும் மகிழ்ச்சியும் பொங்க கேட்ட ஸ்னிக்தாவுக்கு "ஊருக்கு..."

அம்மாவின் குரலில் இருந்த கடுமை புதுத்துணிகளின் வாசனையை மீறி ஒரு தயக்கத்தை ஏற்படுத்தி,  மனதில் எழுந்த ஆர்வத்தையும் குறைத்துவிட ஹாலுக்கு சென்று கம்ப்யூட்டரை ஆன் செய்து தன் ஆஸ்திரேலிய தோழியுடன் ஆன்லைன் கேம்ஸ் விளையாட ஆரம்பித்தாள்.

சற்று நேரத்தில்...

"யார்கூட விளையாடற?" அம்மாவின் குரலுக்கு,

"மென்டி கூட" பயத்துடன் பேசிய ஸ்னிக்தாவின் தலையை தடவிய அம்மா

"ஓ ஒருவாரமா மோனிகா கூட விளையாடி போர் அடிக்குதுன்னு சொன்ன, இப்ப மென்டி மறுபடி வந்துட்டாளா? ஜாலி தான் உனக்கு" என்றதும் உற்சாகம் ஆனாள் ஸ்னிக்தா.

"பால் சாப்பிட்டு தூங்கு".

"ஓகே மம்மி"

அதிகாலையில் எழுந்து அரைதூக்கத்துடன் தாய்தந்தைக்கு நடுவே அமர்ந்து ரயில் பயணம் செய்வது சுகமாக இருந்தது.

நடுநடுவே பலகாரங்கள், அம்மா எடுத்துவந்திருந்த ஸ்னிக்தாவிற்கு மிகவும் பிடித்த ஆங்கில காமிக்ஸ் என வழக்கத்திற்கு மாறாக மிக மகிழ்ச்சியான தினமாக கழிந்தது.

ரயிலில் இருந்து இறங்கி 20 நிமிட ரிக்க்ஷா  பயணத்தில் அந்த இடம் முற்றிலும் புதியதாக ஒரே கூட்டமாகவும், சத்தமாக பேசியபடியும், ஸ்னிக்தாவிற்கு துளிக்கூட பிடிக்காமல் பயமாகவும் இருந்ததால் அம்மாவின் கைகளை கெட்டியாக பிடித்தாள்.

"எல்லாரும் நல்லா இருக்கீங்களா? ஸ்னிக்தா குட்டி.... நல்லா வளந்துட்டா..." இரண்டு கைகள் அவளை அணைக்க முயல பயத்தில் அலறிவிட்டாள்.

"எல்லாரும் நல்லா இருக்கோம் அக்கா.  ட்ரெயினில் வந்த டயாடு... தூக்கம் வேற இல்லையா அதான் அக்கா அவ அழறா" மெதுவாக ஸ்னிக்தாவின் மீதிருந்த அக்காவின் கையை விலக்கியவாறே ஸ்னிக்தாவின் அப்பா சொன்னார்.

"சரி சரி சாப்பிட வாங்க..." என்ற அக்காவை, "மாமா, தீப்தா எல்லாரும் நல்லா இருக்காங்களா அக்கா?" என்றபடி பின்தொடர்ந்தார் ஸ்னிக்தாவின் அப்பா.

"ம்... எல்லாரும் நல்லா இருக்கோம்...  இன்னைக்கு தீப்தாவுக்கு பரதநாட்டிய ரிகர்சல் இருக்கு, அடுத்த மாசம் டான்ஸ் ப்ரோக்ராம் இருக்கே. அதனாலே நாளைக்கு முகூர்த்ததுக்கு வருவாங்க. நீங்க உள்ள போய் சாப்பிடுங்க..." என்று வரவேற்பறையை  நோக்கி நகர்ந்தாள்  அக்கா.

மகன் தினேஷின் வாயை கைக்குட்டையால் துடைத்தவாறு "மாடிக்கு போய் நம்ம ரூமில் ப்லேஸ்டேஷன் விளையாடிக்கோ" என்றபடி தன் மகன் தினேஷ் மாடிக்குச்சென்று கதவை மூடிக்கொள்வதை கண்காணித்தபடியே....  "வா திவாகர், வாம்மா திலகா, ஸ்னிக்தா நல்லா இருக்கீங்களா? என்ற பிரபாகர் "மாடில உங்களுக்கு ரெண்டாவது ரூம் ஒதுக்கி இருக்கு. திங்க்ஸ் எல்லாம் வச்சிட்டு சாப்பிட வாங்க" என்றார்...

"நாங்க எல்லாரும் நல்லா இருக்கோம் அண்ணா. நீங்க, அண்ணி,தினேஷ் எல்லாம் நல்லா இருக்கீங்களா?" என்று விசாரித்துவிட்டு  ஸ்னிக்தாவையும், திலகாவையும் அழைத்துக்கொண்டு மாடிக்கு சென்றான் திவாகர்.

மாடியில்... "ஸ்னிக்தா அம்மாவுக்கும், அப்பாக்கும் இங்க நிறைய வேலை இருக்கு, உனக்கு பிடிச்ச காமிக்ஸும் வச்சிருக்கேன், உன்னோட லேப்டாப்பையும் வச்சி விளையாடிக்கலாம் ரூமைவிட்டு வெளியேவராதே அப்பப்போ நான் வந்து பாத்துக்குறேன்." அம்மா சொன்னது நிம்மதியாக இருந்தது ஸ்னிக்தாவிற்கு.

புது இடம், புது ட்ரெஸ், அவ்வப்போது லட்டு, தேங்காய் பர்பி, வாய்க்கு ருசியான சாப்பாடு என எல்லாம் ரூமுக்கே வர மிக சந்தோஷமான நாளாக உணர்ந்தாள்  ஸ்னிக்தா.

"பிரமாதம் அருமையான சாப்பாடு,அண்ணன்,தம்பி,அக்கா என எல்லாரும் ஒத்துமையோடு பொறுப்பாக தாய் தந்தையின் அறுவதாம் கல்யாணத்தை சீறும் சிறப்புமாக நடத்தினீர்கள். வந்தவர்களை எல்லாம்  நன்றாக உபசரித்தீர்கள். நம் நாட்டில் மட்டும் தான் இதெல்லாம் நடக்கிறது, வெளிநாடுகளில் அம்மா, அப்பா, அண்ணன், தங்கை, அத்தை, சித்தப்பா என்ற பந்தம், பாசம், உறவு முறைகளில் இருக்கும் அன்யோன்யம்  நம்ம அளவுக்கு வலுவனாது கிடையாது...." என்று அந்த ஊரை சேர்ந்த ஒரு பெரியவர், ரயில்வே ஸ்டேஷனில் ஊருக்கு திரும்புவதற்காக காத்திருந்த  திவாகரின் கையை பிடித்துக்கொண்டு சத்தமாக பேசி கொண்டிருக்க, எதுவுமே புரியாமல் தாயின் கைகளை அழுந்த பிடித்துக்கொண்டு பார்த்துக்கொண்டிருந்தாள்  ஸ்னிக்தா.

Thursday, October 25, 2012

பட்ஜட் (Budget)

"சீதாராமன் சார் உங்கள MD கூப்படறார்..."

பியூனின் குரல் வயிற்றில் புளியை கரைக்க, அந்த ஏசி அறையிலும் வியர்த்து கொட்டியது சீதாராமனுக்கு...

சென்ற வாரம் MD-க்கு தெரியாமல் கடனாக வட்டிக்கு கொடுத்த அலுவலக பணம் இன்னும் திரும்ப கிடைக்காததால்...

"வாங்க சீதாராமன் உட்காருங்க, இந்த மாசம் அக்கவுண்டஸ்  டேலி ஆகிவிட்டதா?", MD கேட்க...

"சார்.... வந்து..... ஒரு 25 ஆயிரம்... "என்று சீதாராமன்  முடிப்பதற்குள்...

"என் பர்த்டே பார்ட்டி செலவுகளையும் இதிலே சேத்திடுங்க..."என்ற

MD-இன் வார்த்தைகளால் தான் வட்டிக்கு கொடுத்த பணத்தையும் பர்த்டே செலவுகளில் சேர்த்து விடலாம் என்று மகிழ்ச்சியோடு இருக்கைக்கு திரும்பினார் சீதாராமன்.

வீட்டில்...

"பெரிய கம்பெணில அக்கவுண்டன்டோட பொண்ணுன்னு பேரு... என் பர்த்டேக்கு 300 ரூபாய்ல ஒரு சுடிதார் கூட கிடையாது... ",

அலுத்து கொண்ட சீதாராமனின் மகளை தலையை தடவி கொடுத்து...  

"வாங்கிக்கோம்மா ... உங்க அப்பா என்னிடம் கணக்கு கேட்டா... இந்த மாசம் பாட்டி திதி வந்தது இல்ல,... அந்த கணக்குல இத சேத்துடறன்"' என்றாள் சீதாராமனின் மனைவி...